புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… தென் மாவட்டங்களில் இடியோடு மழை… சென்னையில் வெயில் கொளுத்தும்!
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் வெயில் வெளுத்து வாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பச் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பு இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதன் பிறகு கொளுத்தும் வெயிலால் வறண்ட வானிலையே காணப்பட்டது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சியானது அங்கிருந்து லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்தது. லட்சத்தீவு கடல் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காணப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வெயில்
சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் எப்போதும் போல் இருக்கும்.
குமரியில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது.மேற்கு பகுதிகளிலும், மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்ததால் குமரி மாவட்ட அணைகளுக்கு கணிசமான நீர்வரத்து ஏற்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கோடையிலும் குறையாமல் காணப்பட்டது.
அணை நீர்மட்டம் உயர்வு
சமீபத்தில் பெய்த மழையில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 31.95 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 273 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 62.70 அடியாக ஆனது. இங்கு வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை அதன்முழு கொள்ளளவான 54 அடியிலேயே உள்ளது. பொய்கை அணையிலும் 8.10 அடி தண்ணீர் தேங்கியது.
தண்டோரா எச்சரிக்கை
நேற்றும் கூட பேச்சிப்பாறையில் 1.2 மி.மீ. மழையும், சிற்றாறு-1 பகுதியில் 4 மி.மீ. மழையும், சிற்றாறு-2-ல் 5.2 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. அணைகள் மளமளவென நிரம்பிவருவதால் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை கரையோர மக்களுக்கு மாவட்ட பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை முதல் அந்த பகுதிகளில் தண்டோரா மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கண்காணிப்பு
சிற்றாறு அணை மற்றும் குழித்துறை ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுப்பணித் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியமும் அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.