வாய்க்கு வந்ததை வாரி வீசிட்டு.. திமுகவின் நீட்சி தவெக! விஜய்யை விடாமல் அட்டாக் செய்யும் டிடிவி
சென்னை: தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

விஜய் முதல்வராக பதவியேற்றார்
தமிழகத்தின் முதல்வராக விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். "சி.ஜோசப் விஜய் எனும் நான்" என விஜய் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். விழாவின் தொடக்கம் மற்றும் முடிவில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் பாடப்பெற்றதும் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
முதல்வராக விஜய் பதவி ஏற்றதும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணம் இல்லா இலவச மின்சாரத்தை வழங்குவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை போட்டார்.
200 யூனிட் மின்சாரம் இலவசம்
இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைப்பது மற்றும் போதைப் பொருளை தடுப்பதற்கு "சிறப்பு நடவடிக்கை" மேற்கொள்வதற்கான கோப்புகளில் விஜய் கையெழுத்து போட்டார்.
முதல்வராக விஜய் பதவியேற்றதும் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என காத்திருந்த மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியது மகிழ்ச்சியை கொடுத்தது. எனினும் 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என விஜய் கூறியிருந்தார் என்றும் தற்போது 2 மாதத்திற்கு 200 யூனிட் என விஜய் கூறியுள்ளார் என கண்டனம் எழுந்துள்ளது.
முன்பின் முரணாக உள்ளது
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications