அதிமுகவை அழிக்கவே ஓபிஎஸ் செயல்படுகிறார் - டிடிவி தினகரன் கடும் தாக்கு
சென்னை: திமுகவுடன் சில துரோகிகள் இணைந்து கொண்டு அதிமுக அரசை கவிழ்க்க நினைப்பதாகவும், அதிமுகவை அழிக்கவே ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவுடன் சில துரோகிகள் இணைந்து கொண்டு அதிமுக அரசை கவிழ்க்க நினைக்கின்றனர். அதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கின்றார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சொன்னதே ஓ.பன்னீர்செல்வம் தான். மேலும் முதல்வராகவும் பதவி ஏற்க வேண்டும் எனவும் அவர் தான் வற்புறுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையால் அதிமுக அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்க வேண்டும் என்றால் வழி தவறி சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். கடந்த 1999 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தை மாவட்ட செயலாளராக பரிந்துரைத்தது என் தவறு. என் தவறு. என் கண்பார்வையில் இருந்ததாலேயே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications