அதிமுகவை அழிக்க பி.எச்.பாண்டியனுடன் ஓபிஎஸ் சதி.. டிடிவி தினகரன் பரபரப்பு புகார்
ஓபிஎஸ், பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்க அவதூறு செய்திகளை மக்களிடம் பரப்பி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சிலர் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவைத் தொடர்ந்து, பி.எச்.பாண்டியன் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டார். இப்போது, அதே பி.எச்.பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அதிமுக எனும் இயக்கத்தை அழிக்க சதியில் ஈடுபடுகிறார்.
பி.எச்.பாண்டியனை போல் பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர். முதல்வர் பதவியில் தொடர முடியாமல் போனதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எதிர் காலத்தில் ஓ.பன்னீர்செல்வமும், பி.எச்.பாண்டியனும் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று கூறினார். தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
மேலும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தில் பொதுச் செயலாளர் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் தாம் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications