நீதிமன்றத்தின் சாட்டையடி உத்தரவு... கோர்ட்டுக்கு ஓடி வந்த தினகரன்.. ஃபெரா வழக்கில் ஆஜரானார்!
கட்சியில் பிளவு, நெருங்கும் டெல்லி போலீஸ் என்று அடுத்தடுத்த சிக்கல்களுக்கு மத்தியில் நீதிபதிகளின் கோபத்தில் இருந்து தப்பிக்க ஃபெரா வழக்கில் டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை : அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கண்டிப்பான உத்தரவையடுத்து டிடிவி தினகரன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர்களையும், லண்டன் ஹோட்டல் மூலம் 36.36 லட்சம் டாலர்களையும், 1 லட்சம் பவுண்டுகளையும் டெபாசிட் செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் தினகரன் மீது அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இந்த வழக்கானது நீதிபதி மலர் மதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போதும் டிடிவி தினகரன் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஏப்ரல் 13-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் தினகரன் ஆஜராகவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, இன்று ஆஜராகாவிட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து டிடிவி தினகரன் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனால் வழக்கு விசாரணையை 3 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். இருப்பினும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் வழக்கு விசாரணையை இப்போதே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி 3 மணிக்கு தான் விசாரணை முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இதனால் டிடிவி தினகரன் மீண்டும் 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.