ஓபிஎஸ் எங்க அண்ணன்... அவரு எங்க பங்காளி - அடடே திவாகரன்.. ஆஹா வேலுமணி
ஓபிஎஸ் வேற யாரும் இல்லங்க... எங்களுக்கு சகோதரர் என்று அமைச்சர் வேலுமணி சொல்ல... இன்னொரு பக்கம் திவாகரனோ, ஓபிஎஸ் எங்களின் பங்காளி என்று கூறி அதிமுகவினரின் நெஞ்சத்தை தொட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் வேறு யாரும் இல்லை. அவர் எங்களின் பங்காளிதான் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் சொல்ல, அமைச்சர் எஸ்.பி வேலுமணியோ, ஓபிஎஸ் எங்களின் சகோதரர் என்று சொல்லியுள்ளார்.
வேண்டியவர் வேண்டாதவர் ஆவதும், வேண்டாதவர் வேண்டியவர் ஆவதும் அரசியலில் சாதரணம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி சொன்னது போல, இப்போது பல காட்சிகள் அரங்கேறி வருகின்றன. நேற்றுவரை அடித்துக்கொண்டவர்கள் இன்று அண்ணன் தம்பிகளாக ஒற்றுமை பாராட்டி வருகின்றனர்.
எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், திவாகரனும் சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சுமியின் மரணத்தில் ஒன்றாக இணைந்தனர். தாய்மாமன் உறவு விட்டுப்போயிடுமா என்று பாசத்தைக் கொட்டினார் தினகரன். இப்போது திவாகரனோ, அதிமுகவின் பிளவிற்கு காரணமாக ஒ.பன்னீர் செல்வத்தை தங்களின் பங்காளி என்று கூறியுள்ளார்.

எங்க பங்காளிதான்
தஞ்சாவூரில் ஞாயிறன்று பேட்டி கொடுத்த திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் வேறு யாரும் இல்லை. அவர் எங்களின் பங்காளிதான். அந்த அணியில் இருந்து ஒவ்வொருவராக எங்களுடன் இணைந்து வருகின்றனர். எங்களைப் புரிந்துகொண்டு விரைவில் அவரும் எங்களுடன் வந்து சேருவார்.

ஒரு நிமிடம் போதும்
எல்லோரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். கட்சி, ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து ஒரு தொண்டர்கூட மாற்றுக் கட்சியில் இணையவில்லை. அதிமுகவின் எல்லா அணிகளையும் இணைக்க எங்களுக்கு ஒரு நிமிடம் போதும். ஒரு சில நாட்களுக்கு பின்னர் அதிமுக மீண்டும் நிமிர்ந்து நிற்கும் என்று கூறியுள்ளார் திவாகரன்.

ஈபிஎஸ் ஆட்சிக்கு சர்டிபிகேட்
முதல்வர் பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தன்னிச்சையாக செயல்படவில்லை. மற்ற அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்துதான் ஆட்சி நடத்துகிறார் என்றும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார் திவாகரன்.

இரு சகோதரர்கள்
கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணியோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நான் என் சகோதரர்களாகவே பார்க்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஓபிஎஸ் அணியினர் எங்கே கூட்டம் நடத்தினாலும் அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்லி வருகிறோம்.

விரைவில் இணையும்
எங்கள் இரு அணிகளுக்குள் ஆரோக்கியமான சூழல் நிலவி வருகிறது. அதிமுகவின் இரு அணிகளிலும் பிரச்சினை செய்வதற்கென்றே ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் விரைவில் இணையும். இரட்டை இலையை மீட்டு இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார் அமைச்சர் வேலுமணி.

ஆகஸ்ட் 5 அறிவிப்பு
இதனிடையே மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளராகவும், கட்சியின் தொண்டனாகவும் என்னுடைய முதல் பணி கட்சியை பலப்படுத்துவதே. அதை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு தொடர்வேன். பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைப்பேன். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் சொன்னதால் கொஞ்ச நாட்கள் நான் ஒதுங்கியிருப்பதாகச் சொன்னேன்.

2019 லோக்சபா தேர்தல்
கட்சியை ஒன்றிணைப்பதும், கட்சியை பலப்படுத்துவதும், 2019 லோக்சபா தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதுமே என் வேலை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். உள்ளாட்சித் தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் எதிர்கொள்ள இரட்டை இலை வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்துதான் இதனை கூறியுள்ளார் தினகரன்.

கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும்
தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். வெட்டிக்கொண்டு கிடந்தவர்கள் ஒட்டிக்கொள்ளலாம். கண்கள் பணித்து இதயம் இனிப்பது திமுகவிற்குள் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு அதிமுகவிற்குள் அடித்துக்கொண்டு பிரிந்தவர்கள் ஒன்றாக இணைவது 1990களிலேயே நிகழ்ந்ததுதான். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நிகழப்போகிறது.

ஒற்றுமையின் வலிமை கதை
நமது எம்ஜிஆரில் கடந்த சில தினங்களாகவே ஓ.பன்னீர் செல்வத்தை திட்டியோ, அவர்களின் அணியை வசைபாடியோ எந்த செய்தியும் வெளியாகவில்லை. அதற்கு மாறாக தாய் சொன்ன தத்துவ கதைகள் என்று ஜெயலலிதா, மேடைகளில் சொன்ன ஒற்றுமையின் வலிமை பற்றிய கதைகளை பதிவிட்டு வந்தனர். அதற்கு பலன் கிடைத்து விட்டது போல, அணிகள் இணைப்பு பற்றியே இப்போது அனைவரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

வேண்டாதவர் வேண்டியவர் ஆவர்
நேற்றுவரை எதிரிகளாய் இருந்தவர்கள் இன்று பங்காளிகளாக மாறுவதும், அண்ணன் தம்பிகளாக மாறி கைகுலுக்கி கட்டிப்பிடித்துக்கொள்வதும் சகஜம்தான். வேண்டியவர் வேண்டாதவராவதும், வேண்டாதவர் வேண்டியவர் ஆவதும் அரசியலில் சகஜம்தான். இதைத்தான் அரசியலில் நிரந்தர பகைவன் என்று யாரும் இல்லை... நிரந்தர எதிரி என்றும் யாரும் கிடையாது என்று தீர்க்கதரிசனமாக சொல்லிவைத்திருக்கிறார்கள். இந்த தமிழக மக்கள் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ?












Click it and Unblock the Notifications