அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் திடீர் ஆலோசனை.. என்னாவா இருக்கும்?
அதிமுக தலைமை கழகத்தில் டிடிவி.தினகரன் அதிமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக அணியினர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ஜெயலலிதா மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பினர். ஜெயலலிதா வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு காயமடைந்தார் என அப்பல்லோ அறிக்கையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஓபிஎஸ் தரப்பு கையில் ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருப்பதால் சசிகலா குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று அதிமுக எம்பிக்கள் மற்றும் அமைச்ச்ரகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சிலரும் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்களும் பங்கேற்றனர். இந்த திடீர் ஆலோசனைக் கூட்டத்தால் முக்கய முடிவுகள் ஏதும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.