வீணாப்போன தினகரனைப் பார்த்து.. அப்பல்லோவில் கை அசைத்தாராம் ஜெ.. கே.பி.முனுசாமி ஆவேசம்
மருத்துவ அறிக்கைப்படி மயக்க நிலையில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா, தன்னைப் பார்த்து கையசைத்ததாக தினகரன் பொய் சொல்கிறார். அவரை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி
சென்னை: அதிமுகவில் இருந்து 2007ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட தினகரன், ஜெயலலிதா இறந்த பிறகுதான் அப்பல்லோ மருத்துவமனைக்கே வந்தார். அப்படி இருக்கும் போது, மருத்துவமனைவில் அவரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்தார் என்று பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுகிறார் தினகரன் என்று கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பெயரை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி பேசியதாவது:
2007ம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த தினகரனை நாடாளுமன்றத்திற்கு செல்லக் கூடாது என்று ஜெயலலிதா கட்டளையிட்டார். அதனைத் தொடர்ந்து 2011ல் தினகரன், கட்சியில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார். 2007ல் இருந்து ஜெயலலிதா மரணம் வரை ஒருவருக்கொருவர் நேரடியாக சந்திக்கவே இல்லை. ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் செப்டம்பர் 25ம் தேதி ஜெயலலிதாவை நேரடியாக பார்த்ததாகவும், ஜெயலலிதா இவரைப் பார்த்து கை அசைத்ததாகவும் தினகரன் கூறியுள்ளார்.
தினகரனின் கீழ்தரம்
அரசியலில் எவ்வளவு கீழ்தரமாக நடந்துக் கொள்ளக் கூடியவராக தினகரன் இருக்கிறார்? செப்டம்பர் 25ம் தேதி, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, மிகவும் ஆபத்தான நிலையில் ஜெயலலிதா இருந்தார். அப்படியான நேரத்தில் தன்னைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்ததாகக் கூறுகிறார் தினகரன்.
ஜெ.வை நேரில் பார்த்தாரா?
இரண்டாவதாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இவர்தான் கூட்டணிக்கு உதவியதாக கருத்துக்களை பேட்டியில் கூறியுள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. 2007ல் வெளியேற்றப்பட்டவர் ஜெயலலிதா மறைந்த பின்னர்தான் அப்பல்லோ மருத்துவமனைக்கே வருகிறார். அவ்வளவு பயந்து வெளியே இருந்த ஒருவர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன் என்கிறார். கூட்டணி அமைத்தேன் என்றும் இல்லாததை சொல்கிறார்.
ஜெ. ஆன்மா மன்னிக்காது
அரசியலில் ஒரு அங்கீகாரம் பெறுவதற்காக யாரால் வெளியேற்றப்பட்டாரோ, அவரே அங்கீகரத்ததாக பெரிய பொய்யை கூறுகிறார். சசிகலாவிடம் ஜெயலலிதா சொன்னது போல் இன்னொறு பொய்யையும் தினகரன் கூறியுள்ளார். அதாவது "நான் வெளியே வந்த உடன் தினகரனுக்கு பதவி கொடுக்கிறேன்" என்று ஜெயலலிதா சொன்னதாக சொல்கிறார். அவர் ஒரு பொய்யர்.. ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என்று கே.பி. முனுசாமி கூறினார்.