ஜெயக்குமார், டிடிவியின் அடுத்த லெவல் அட்டாக் பேச்சுகள்.!
தமிழக அமைச்சர்கள் அனைவரும் பைத்தியங்கள் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக அமைச்சர்கள் அனைவரும் பைத்தியங்கள் என்று ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தினகரனுக்குத் தான் கட்சி, பதவி இல்லை என்ற பைத்தியம் பிடித்துவிட்டதாக பதிலடி தந்துள்ளார்.
அதிமுகவினருக்கும், டிடிவி. தினகரனுக்குமான விமர்சனங்கள் ஆட்சி சரியில்லை மக்களின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்று தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இந்த அரசியல் பேச்சுகள் தற்போது வேற லெவலை எட்டியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் வழக்கம் போல அமைச்சர்களை விமர்சித்து கருத்துகளை கூறினார். நடராஜனுக்கு சிகிச்சை அளித்தது போல ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்திருந்தால் அவர் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது குறித்து பதில் அளித்தார். ஜெயலலிதாவிற்கு தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை மக்கள் நன்று அறிவார்கள் என்றார்.
கீழ்ப்பாக்கம் போக வேண்டியவர்கள்
தொடர்ந்து அரசையும் அமைச்சர்களையும் தினகரன் விமர்சித்தார். அமைச்சர்கள் யாருமே சாதாரணமாக இல்லை என்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் அனைவரும் கோமாளிகள் என்று நினைத்தேன், ஆனால் இவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கத்திற்கு போக வேண்டியவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் போக வேண்டி வரும்
6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழ்ந்துவிடும். 6 மாதத்திற்குள் அமைச்சர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்க வேண்டிய நிலைக்கு போவார்கள் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
டிடிவி. தினகரனின் இந்த பேச்சுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு என்ற பாடல் தான் டிடிவி. தினகரனுக்கு பொருந்தும்.
கட்சியில்லை என்ற பைத்தியம்
கட்சியில்லை என்ற ஒரு பைத்தியம், பதவி இல்லை என்ற ஒரு பைத்தியம் அந்த பைத்தியத்திற்கு பார்ப்பதெல்லாம் பைத்தியமாகத் தான் தெரியும். அந்த பைத்தியம் சொல்வதை போகட்டும் விட்டுவிடு என்று தான் விட்டுவிட வேண்டும் அதை பெரிதாக நினைக்கக் கூடாது என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மோசமாகி வரும் விமர்சனங்கள்
இதுவரை எதுகை மோனை விமர்சனங்களாக இருந்த இவர்களின் அரசியல் தடாலடிகள் தற்போது எல்லையை மீறி பைத்தியம் என்ற அளவில் விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது. டிடிவி. தினகரன், ஜெயக்குமாரின் இந்த பேச்சுகள் அரசியல் அரங்கில் தலைவர்களின் பேச்சுகள் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.