திடீர் கூவத்தூராக மாறியது "திஹார்" தினகரன் வீடு.. ஆதரவாளர்கள் குவிகிறார்கள்!
டிடிவி தினகரனுடன் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 20 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: டிடிவி தினகரனுக்கு தற்போதுவரை 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் எதிர்கால அரசியல் பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திஹார் தினகரனின் வீடு தற்போது திடீர் கூவத்தூராக மாறி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் திகிலில் ஆழ்ந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் இரண்டாக பிளவுப்பட்ட அதிமுகவில், தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி உருவாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையததிற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள தினகரன் மீண்டும் கட்சிப் பணியாற்ற போவதாக கூறியுள்ளார்.
ஆனால் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். துணை பொது செயலாளரான தம்மை ஒதுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என கூறியுள்ள தினகரனுக்கு வெளிப்படையாகவே 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
காலை முதலே டிடிவி தினகரன் வீட்டிற்கு எம்எல்ஏக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 பேர் காலையில் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் வர உள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் அமைச்சர் பதவி கேட்டும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி செவி சாய்க்கவில்லை எனவேதான் எம்எல்ஏக்கள் வரிசையாக டிடிவி பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
60 நாட்களுக்குள் இரு அணிகளும் இணைவார்களா அல்லது தனக்கு ஆதரவாளர்கள் எம்எல்எக்கள் அதிகரித்துக்கொள்வாரா தினகரன் என்பது போகப் போக தெரியும். திஹார் தினகரனின் வீடு இப்போது திடீர் கூவத்தூர் ரெசார்ட்ஸ் ஆக மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.