இரட்டை இலை சர்ச்சை: நாங்கதான் உண்மையான அதிமுக - தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு மனு
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை விவகாரத்தில் தங்களை கேட்காமல் எதுவும் முடிவெடுக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது.
டெல்லி: ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைந்தாலும் இரட்டை இலை சின்னம் பெறுவதில் டிடிவி தினகரன் அணியால் சிக்கல் எழுந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்கள் கருத்தையும் கேட்கவேண்டும் என்றும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் டிடிவி தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் முன்னாள் எம்.பி. அன்பழகன் தேர்தல் ஆணையத்திடம் இன்று புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இரட்டை இலை முடக்கம்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பதில் கேள்வி எழுந்தது. இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இது குறித்தும் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி வைத்தது.

அணிகள் இணைப்பு
இது தொடர்பாக லட்சக்கணக்கில் ஆவணங்கள்,பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று இருவருமே கூறி வந்தனர். இந்த நிலையில் சசிகலா சிறை சென்றதால் தற்போது டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி அணிகள் இணைந்து விட்டன.

இலை கிடைக்குமா?
இதனையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான புகார் மனுவை ஓபிஎஸ் அணியினர் திரும்பப்பெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து வழக்கை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளனர்.

எங்களுக்கே இரட்டை இலை
அதே நேரத்தில் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இரட்டை இலையை மீட்டாலும் அது எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் மனு
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை விவகாரத்தில் தங்களை கேட்காமல் எதுவும் முடிவெடுக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தில் இன்று டிடிவி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது.
Recommended Video


இலை துளிர்க்குமா
ஏற்கனவே இரட்டை தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் அளித்த புகார் மனுவே முடங்க காரணமானது. இப்போது அவர்கள் மனுவை வாபஸ் பெற்றாலும் தினகரன் அணியினரின் புதிய சர்ச்சையால் இலை மீண்டு வருமா? அல்லது மீண்டும் முடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எங்களையும் கேளுங்கள்
தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளதாக கூறினார்.
புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.

தினகரன் அணிதான் உண்மை
உண்மையான அதிமுக தினகரன் அணிதான். அவர்கள் கிடையாது. கட்சி அலுவலகத்தையும், லெட்டர் பேடையும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். ஓபிஎஸ் ஏற்கனவே கொடுத்த புகாரை வாபஸ் பெற உள்ள நிலையில் புதிய மனு ஒன்றை கொடுத்து இரட்டை இலைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது தினகரன் அணி.












Click it and Unblock the Notifications