ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வரலாற்று தோல்வியைதான் பெறுவார்... சொல்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வரலாற்று தோல்வியைதான் பெறுவார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வரலாற்று தோல்வியைதான் பெறுவார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் சிறைக்குதான் போவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பண மதிப்பிழப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக கட்சியும் முடங்கும்
"அ.தி.மு.க.வில் இப்போது தெரிந்தே 3 பிரிவுகளாக உள்ளனர். இன்னும் தெரியாமல் எத்தனை அணிகள் உள்ளார்களோ தெரியவில்லை. விரைவில் அதுவும் வெளிச்சத்துக்கு வரும் அதிமுக கட்சியும் முடங்கும்.
மக்கள் முடக்கி விடுவார்கள்
அ.தி.மு.க கோஷ்டிகளின் சண்டையால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. நடக்க உள்ள ஆர்.கே. நகர் தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வை மக்கள் முடக்கி விடுவார்கள்.
ஓபிஎஸ்க்கு அமோக ஆதரவு உள்ளது
இப்போதுள்ள 3 அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொண்டர்கள் ஆதரவு அமோகமாக உள்ளது.
வரலாற்று தோல்வியையே பெறுவார்
திடீரென கட்சிக்கு துணை பொதுச்செயலாளராகி ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் தினகரன். அவர் வரலாற்று வெற்றி பெறுவார் என்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். அவர் வரலாற்று வெற்றி பெறமாட்டார் வரலாற்று தோல்வியையே பெறுவார்.
தினகரன் சிறைக்குதான் போவார்
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சிறைக்குதான் போவார். சட்டசபைக்கு போக மாட்டார் இது உறுதி. சிகலாவைப்போல் தினகரனாலும் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும்.
ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவது தவறு
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது படத்தை அ.தி.மு.க. அரசு பயன்படுத்துவது தவறு." இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.