லஞ்ச சம்பவத்தால் தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்து விட்டார் தினகரன்: தமிழிசை காட்டம்
தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாலேயே தினகரன் கைது செய்யப்பட்டதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே டிடி வதினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் கைது குறித்து கருத்து தெரிவித்த அவர், சட்டம் தன் கடமையை செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் பணத்தைகொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற மாண்பை உருவாக்கிய தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு ஊழல் பணத்தை சன்மானமாக கொடுத்து தன்மானத்தை விற்றவர் என்றும் வசைபாடியுள்ளார் தமிழிசை. மேலும் தமிழகத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்த தினகரன் மீது நடவடிக்கை எடுத்ததை பாஜகவின் பின்னணி என்று கூறுவது ஏற்க முடியாதது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தினகரனை மனித புனிதரைப் போல பாவிப்பது நகைப்புக்குரியது என்றும, யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனும், சுகேஷும் மாறி மாறி தங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது என்று கூறினாலும் இருவரும் தொலைபேயில் உரையாடியது, பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் என ஏராளமான ஆதாரங்களை திரட்டி பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கடைசி கட்டமாகவே தினகரன் கைது நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications