'மோடி அரசின் நோக்கமே நான் ஜெயிச்சிடக் கூடாதுங்கறதுதான்!' - புலம்பும் தினகரன்
ஜெயலலிதா மறைவில் நீடிக்கும் மர்மம் சசிகலா குடும்பத்தின் மீது தமிழ்நாட்டு மக்களையே வெறுப்படைய செய்திருக்கிறது. ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்களை விரட்டியடிப்பது முதல் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போனில் அர்ச்சனை செய்வது வரை மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.
இவ்வளவு மக்கள் எதிர்ப்பு இருந்தும் கூட தினகரன் களம் இறங்கியதும் 50 ஆயிரம் ஓட்டு, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று சவால் விட்டதும் மேலிடத்தைக் கோபப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் நேரடிப் பார்வை ஆர்கே நகர் மீது விழுந்திருக்கிறது. கண் கொத்திப் பாம்பாக கவனித்து வருகிறார்கள். பகிரங்கமாக நடக்கும் பட்டுவாடாக்களின் வீடியோக்கள் டெல்லி மேலிடத்தை கோபப்பட வைத்திருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் வரை மாற்றி இருக்கிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டு பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறார்கள். குவியும் புகார்களின் விளைவால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இடைதேர்தலுக்கு இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் கமிஷனின் துணை கமிஷனரே நேரடியாக வந்து மேல்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.
திமுக, ஓபிஎஸ் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்று முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. 'என்ன நடந்தாலும் சரி... நான் ஜெயித்துவிடக்கூடாது என்பது தான் மத்திய அரசின் நோக்கம்' என்று நெருங்கியவர்களிடம் புலம்பியிருக்கிறார் தினகரன். கிட்டத்தட்ட அது உண்மைதான் என்று நினைக்கும் அளவுக்கு கிடுக்கிப்பிடி போடுகிறது மத்திய அரசு.
- ஆர்ஜி












Click it and Unblock the Notifications