சசிகலா புஷ்பா, சின்னத்துரைக்கு சீட்டா?.. தூத்துக்குடி அதிமுகவில் புகைச்சல்
தூத்துக்குடி: ராஜ்யசபா தேர்தலில் தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா மற்றும் சின்னத்துரை ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளதற்கு அங்குள்ள அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளதாம்.
ராஜ்யசபா தேர்தலில் நான்கு இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நான்கு வேட்பாளர்களுமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் இந்த இரு மாவட்ட அதிமுகவினரும் குஷியடைந்துள்ளனர். அதேசமயம், தூத்துக்குடியில் அதிமுகவினர் மத்தியில் புகைச்சலும் கிளம்பியுள்ளது. அதாவது மேயர் சசிகலா புஷ்பா மற்றும் சின்னத்துரை ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளதால் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
சின்னத்துரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆவார். முன்பு அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து செயல்பட்டவர். அவர் மூலம் வளர்ந்தவரும் கூட. பின்னர் அனிதா அதிமுகவை விட்டே வெளியேற்றப்பட்டார்.
பின்னர் அமைச்சர் சண்முகநாதனுடன் இருந்து அரசியல் செய்தார்.
சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டு செல்லபாண்டியன் அமைச்சரானதால் சண்முகநாதனை விட்டு விலகி செல்லபாண்டியனுடன் இணைந்தார். இவர் வந்த நேரம் சில நாட்களிலேயே செல்லபாண்டியன் பதவி பறிபோனது.
இதனால் மீண்டும் அமைச்சர் சண்முகநாதனுடன் செல்லமுடியாமல் தனியாக அரசியல் செய்து வந்தார். தற்போது இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது இது கட்சியில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சசிகலா புஷ்பா அமைச்சர் சண்முகநாதன் ஆதரவாளர் ஆவார். இவருக்கு சீட் தரப்பட்டது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம். சீனியர்கள் பலர் இருந்தும் சசிகலாவுக்கு சீட் தரப்பட்டது நியாயம் இல்லை என்று அவர்கள் புலம்புகிறார்களாம்.












Click it and Unblock the Notifications