ஜெ.வுக்கும், தனது மகனுக்கும் சீட் கேட்டு ஒரே தொகுதிக்கு மனு கொடுத்த தூத்துக்குடி எம்.பி!
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடக் கோரி அதிமுக அமைப்பு செயலாளரும், எம்பியுமான நட்டர்ஜி விருப்ப மனுவை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனிடம் வழங்கினார்.
அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வழக்கம் போல ஜெயலலிதாவுக்காக பலரும் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். கூடவே தங்களுக்கும் ஒரு மனுவைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நட்டர்ஜி எம்.பி.யின் மகன் சாமுவேல் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நட்டர்ஜியும் ஒரு மனு கொடுத்துள்ளார்.
இதேபோல எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளரும், செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ.,வின் அண்ணன் மகனுமான ஞான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜம்மாளின் மகன் மனோகர் ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக நிர்வாகி பொன்ராஜ் ஆகியோர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவும், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன், விளாத்திக்குளம் புதூர் ஊராட்சி குழுத்தலைவர் தனம் ஜெயம், மாவட்ட கவுன்சிலர் கருப்பூர் சீனி உட்பட பலர் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட மனு அளித்துள்ளனர்.
வரும் 23ஆம் தேதி நிறைந்த பவுர்ணமி என்பதால் அன்று அதிக அளவிலான அதிமுகவினர் விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications