ரஜினி எங்களை பார்க்க வந்திருக்கவே கூடாது: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள்
Recommended Video
தூத்துக்குடி: உரிமைக்காக போராடிய எங்களை ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என்று கூறியது வருத்தமாக உள்ளது என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.
அவரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் ரஜினியின் பேச்சால் மனமுடைந்து போயுள்ளனர்.
இது குறித்து காயமடைந்தவர்கள் கூறியிருப்பதாவது,
மருத்துவமனைக்கு வந்து சிரித்து சிரித்து பேசிவிட்டு வெளியே சென்று எங்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியிருப்பது வருத்தமாக உள்ளது. அவர் மட்டும் பேட்டி கொடுத்து விட்டு வந்து எங்களை சந்தித்திருந்தால் அவர் கொடுத்த பணத்தை தொட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.
அவர் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். உரிமைக்காக போராடுபவர்கள் சமூக விரோதிகளாகிவிட்டோமா?. அவர் எங்களை அசிங்கப்படுத்திவிட்டார். எங்களை பற்றி இப்படி நினைப்பவர் மருத்துவமனைக்கே வந்திருக்கக் கூடாது.
நாங்கள் குடும்பம், குடும்பமாக போராடினோம். நாங்கள் சமூக விரோதிகள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.