வெந்த புண்ணில் 'ஷாக்'... கொதிகலன் ரிப்பேர்.. 210 மெ.வாட் மின் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210மெகாவாட் திறன் கொண்ட 5அலகுகள் மூலம் 1050மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு 30வருடங்கள் ஆகின்றது. இதனால் அவ்வப்போது அனல்மின் நிலையத்தின் கொதிகலன்கள் மற்றும் இயந்திரகோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அதனை தொடர்ந்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி துவங்குவதும் தொடர்கதையாக உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 2&8&14அன்று 3வது யூனிட்டில் ஏற்பட்ட கொதிகலன் பழுதுகாரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது இதனை தொடர்ந்து பழுதுசரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் இன்று அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் கொதிகலன் பழுதுகாரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது 5வது யூனிட்டில் ஏற்பட்டுள்ள கொதிகலன் சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்றுவருவதாகவும் இன்று இரவு அல்லது நாளைக்குள் மீண்டும் மின் உற்பத்தி துவங்கும் என்றனர்.
ஏற்கனவே காற்றாலைகள் கைவிரித்து விட்டதால் மின் உற்பத்தி கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு 210 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.