"டவுட்" கேட்டு கேட்டே டுட்டோரியல் டீச்சரை மடக்கிய மாணவன்... ரெண்டு பேரும் எஸ்கேப்!
திண்டுக்கல்: இதோ இன்னும் ஒரு ஆசிரியை - மாணவன் எஸ்கேப். இப்போது திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையைப் போலவே இதிலும் ஆசிரியைக்கு வயது அதிகம், மாணவன் அவரை விட வயது குறைந்தவர். இருவரும் வீட்டை விட்டு ஓடியதால் இரு வீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
டுட்டோரியல் கல்லூரியில் படித்த மாணவன் ஒருவர் ஆசிரியையுடன் ஓடிய சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவனும் காணாமல் போன சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இருவரும் இதுவரை சிக்கவில்லை.
இந்த நிலையில் அதேபோன்ற இன்னொரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. முத்தழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி. 21 வயதாகும் இவர் டீச்சர் டிரெய்னிங் முடித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுட்டோரியல் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார்.
அதே பள்ளியில், குமார் என்ற 18 வயது மாணவர் படித்து வந்தார். இவர் கடந்த வருடம் நடந்த பிளஸ்டூ தேர்வில் தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர். இதனால் இந்த டுட்டோரியலில் சேர்ந்து படித்து வந்தார்.
வகுப்பில் சாரதி பாடம் நடத்தும்போது அடிக்கடி எழுந்து கேள்வி கேட்பாராம் குமார். இதனால் குமாரை சாரதிக்குப் பிடித்துப் போய் விட்டது. வெரிகுட் என்று பாராட்டியுள்ளார். நாளடைவில் இந்தப் பாராட்டு காதலாக மாறி, இருவரும் காதலர்களாக மாறி விட்டனர்.
வகுப்பில் இவர் டவுட் கேட்பார், அவர் விளக்குவார். வகுப்பு முடிந்ததும் காதலர்களாக மாறி பல்வேறு இடங்களுக்கும் போய் சுற்றி வந்துள்ளனர். விடுமுறை நாட்களிலும் கூட விடாமல் வெளியே போய் வரவே இரு வீட்டாருக்கும் சந்தேகம் வந்து வேவு பார்த்து இருவரது காதலையும் கண்டுபிடித்துள்ளனர். இது சரிவராது, மறந்து விடுங்கள் என்று கூறி கண்டித்துள்ளனர். ஆனாலும் சாரதியும், குமாரும் தொடர்ந்து காதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சாரதியும், குமாரும் காணாமல் போய் விட்டனர். இருவரும் சேர்ந்தே ஓடி விட்டதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து இரு வீட்டு பெற்றோரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.