மீனவர்களையும் படகுகளையும் மீட்கக் கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வாழ்வுரிமைக் கட்சி
சென்னை: இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்கக் கோரி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ந்து கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. அவர்களது படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்தம் படகுகளையும் உடனே விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று காலை 11.30 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை விடுவிக்கக் கோரியும், இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.