ராஜபக்சே பங்கேற்கும் மோடி விழாவை ஜெ. புறக்கணிக்க வேண்டும்: தி. வேல்முருகன்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்க வேண்டும் என்று லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி. வேல்முருகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது:
தமிழக சட்டசபையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதனால் ராஜபக்சே பங்கேற்க இருக்கிற மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம். ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இந்த வேண்டுகோளை முன்வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.