சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டி: பண்ருட்டி வேல்முருகன்
கடலூர்: சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் தாம் நெய்வேலி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற்றிருந்தது. இருப்பினும் அக்கட்சி கோரிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறியது.
இதனிடையே வேல்முருகன் தலைமையில் 10 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி உருவாகும் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.
மேலும் நெய்வேலி சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.
அமைப்புச் செயலர் நீக்கம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் காமராஜ், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் வேல்முருகன் கூறினார்.