தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க தைத் திருநாளில் சபதமேற்போம்: வேல்முருகன்
சென்னை: தமிழகத்தை சூழ்ந்துள்ள பேராபத்தான சூழலை முறியடித்து தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க பொங்கல் திருநாளில் சபதமேற்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தி:
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் தமிழகத்தின் மீது படையெடுத்திருக்கும் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம்.
தமிழகத்தின் நான்கு முனைகளிலும் பிற மாநிலங்களால் நமது வாழ்வுரிமைகள் காவு கொள்ளப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டும் கொண்டிருக்கிற சூழல்தான் இப்போது உள்ளது. இந்த பேராபத்தான சூழலை முறியடித்து தமிழ்நாட்டின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க இன்றைய திருநாளில் சபதமேற்போம்.
இலங்கையில் ஈழத் தமிழர் வாக்குகளால் அமையப்பெற்ற புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையிலாவது தமிழ்நாட்டு மீனவ சொந்தங்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் உறுதியேற்போம்.
மத்தியில் அமைந்துள்ள இந்தியப் பேரரசோ முன்னெப்போதும் இல்லாத வகையில் சமஸ்கிருத திணிப்பு, இந்தித் திணிப்பு, இந்துத்துவா திணிப்பு என மிகவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்களை வேட்டையாடும் இந்த இந்துத்துவா கும்பலின் முயற்சிகளை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மண் இதுவென நிரூபிப்போம்!
தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைத் தாண்டி அனைத்து ஜனநாயக சக்திகளுடம் கடந்த காலங்களைப் போல தமிழர்களாக ஓரணியில் ஒன்று திரண்டு நம் வாழ்வுரிமகளை மீட்க இப்புத்தாண்டு நன்னாளில் சபதமேற்போம்.
அனைத்து தமிழக மக்களுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு- தைத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்












Click it and Unblock the Notifications