தமிழகம் முழுவதும் த.வா.க.வினர் சுங்க சாவடி முற்றுகை போராட்டம்! 1,500 பேருடன் தி. வேல்முருகன் கைது!
விழுப்புரம்: சுங்கச்சாவடி மையங்களை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர்இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி சுங்க சாவடியை முற்றுகையிட முயன்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் சுங்க கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் சாலை பராமரிப்பை மேற்கொள்ளாத இந்த சுங்க சாவடி முறையையே முற்றாக அகற்ற வேண்டும் என்பதும் பல அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்க சாவடி மையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் 1500 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அனைத்து இடங்களிலும் சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.