பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. நாளை மறுநாள் த.வா.க போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து புல்லூர் தடுப்பணையில் ஆந்திரா அரசின் அணை உயர்த்தும் பணிகளைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் வரும் ஜூலை 8-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணையே கட்டக் கூடாது என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திரா அரசின் முயற்சிகளை தொடர் போராட்டங்களால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தகர்த்துள்ளது.
தற்போது வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையின் 5 அடி உயரத்தை 10 முதல் 20 அடி அளவுக்கு உயர்த்தும் வஞ்சக நடவடிக்கையை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழக விவசாயிகளின் வயிற்றிலடிக்கிற, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே அப்படியே கபளீகரம் செய்கிற ஆந்திராவின் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழகமே ஒற்றைக் குரலில் வன்மையாக கண்டித்து வருகிறது.
ஆந்திராவின் இந்த வஞ்சகத்தால் தமிழகத்தின் 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும். இதை நம்பியுள்ள விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். தமிழகத்தில் பாலாறு என்ற நதி இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து புல்லூர் தடுப்பணையில் ஆந்திரா அரசின் அணை உயர்த்தும் பணிகளைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் வரும் ஜூலை 8-ந் தேதி எனது தலைமையில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் ஆந்திரா அத்துமீறுமேயேனால் அந்த மாநில அரசின் எந்த ஒரு அரசு நிறுவனமும் தமிழ் மண்ணில் செயல்பட முடியாது என்பதையும் கடுமையாக எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.