சேலத்தில் உயிரிழந்த மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்... சொந்த அண்ணனே பலாத்காரம் செய்தது அம்பலம்!
சேலத்தில் போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்ததால் உயிரிழந்த மாணவியை அவருடைய அண்ணனே பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Recommended Video

சேலம் : சேலத்தில் போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவருடைய அண்ணனே மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொம்மியம்பட்டியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த 31ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் முறையற்ற உறவால் உண்டான கருவைக் கலைப்பதற்காக நடுப்பட்டியைச் சேர்ந்த சுல்தானா என்ற போலி மருத்துவரை அணுகியதால் மாணவி உயிரிழக்க நேரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி மருத்துவர் சுல்தானா கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவர் ஒருவர் தான் மாணவியை கர்ப்பிணி ஆக்கி இருக்கக் கூடும் என முதலில் கூறப்பட்டது.

பெற்றோர் வாக்குமூலம்
மாணவியை கர்ப்பமாக்கிய நபர் யார் என்பது குறித்து தீவட்டிப்பட்டி மகளிர் போலீசார் பெற்றோரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியை பலாத்காரம் செய்தது உடன் பயின்ற மாணவர் அல்ல, தங்கள் மகன் தான் என பெற்றோர் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.

ஒப்புகொண்ட பெற்றோர்
பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரியான தங்களது மகன் ஹரீஷ் தான், சொந்த தங்கையை பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். பெண்ணின் அண்ணனே பலாத்காரம் செய்தது வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் சுல்தானாவிடம் அழைத்துச் சென்று மகளுக்கு கருக்கலைப்பு செய்ததையும் பெற்றோர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஹரீஷை கைது செய்த தீவட்டிப்பட்டி போலீசார், அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்திருக்கலாம் என பெற்றோர் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் சேலம் மக்கள்
தனது சகோதரியிடமே ஹரீஷ் இப்படி நடந்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை சொந்த சகோதரனே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications