புதுச்சேரியில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: ரவுடி கும்பல் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடிக்கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை காலாப்பட்டை சேர்ந்தவர் சிங்காரம். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி ஷாலினி (வயது 27). தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று இரவு ஷாலினி அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக அஜந்தா சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். வெகு நேரமாக பஸ் வரவில்லை.
அப்போது அவரது குடும்ப நண்பர் ராஜேந்திரன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். எனவே தன்னை வீட்டின் விட்டுவிடும்படி கூறி அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பொம்மையார் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி ராஜேந்திரனிடம் ஷாலினி கூறினார். பின்னர் அருகில் உள்ள மறைவான இடத்துக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் அருகே 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அவர்கள் ஷாலினியை கத்தியை காட்டி மிரட்டி பலவந்தம் செய்ய முயன்றனர். இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அவரை மீட்க சென்ற ராஜேந்திரனை அவர்கள் தாக்கிவிட்டு ஷாலினியை தங்கள் காரில் கடத்தி சென்றனர்.
படுகாயம் அடைந்த அவர் யாரிடமாவது உதவி கேட்கலாம் என மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது தமிழக பகுதியை சேர்ந்த ரோந்து போலீசார் காரில் வந்தனர். அவர்களிடம் ராஜேந்திரன் நடந்ததை கூறினார். எனவே ஷாலினி கடத்தி கொண்டு வரப்பட்ட புதுவை பகுதியை நோக்கி அவர்கள் வேகமாக காரில் வந்தனர்.
மேலும் இதுகுறித்து புதுவை, முத்தியால்பேட்டை போலீசாருக்கும் தகவல் அளித்தனர். எனவே முத்தியால்பேட்டை போலீசார், போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த காரை வழிமறித்தனர். ஆனால் அதனை ஓட்டி சென்றவர்கள், போலீசாரை மதிக்காமல் அத்துமீறி எதிரே உள்ள தெருவுக்குள் காரை ஓட்டி சென்றனர்.
இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீசாரும், தமிழக பகுதி ரோந்து போலீசாரும் அவர்களை 5 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார்.
கருவடிக்குப்பத்தை சேர்ந்த அன்புராஜ் (வயது 48), நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (19) ஆகிய 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் தமிழக-புதுவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 2 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.