இரு அணிகள் நிச்சயம் இணையும்.. ஓபிஎஸ் ஏன் குழுவை கலைத்தார்? ஜெயக்குமார் ஷாக்
பிரிந்து கிடக்கும் இரு அணிகளும் நிச்சயம் ஒன்றிணையும். பேச்சுவார்த்தை குழுவை ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் நிச்சயம் இணையும் என்று நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அணி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் இரு அணிகளும் சேரும் வாய்ப்பு உருவானது.
எனினும், இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடித்தே வருகிறது. ஒரு அணியினர் மற்றொரு அணியினர் மீது மாற்றி மாற்றி குற்றச்சாட்டுக்களை வைத்தே வருகின்றனர்.

இணைப்பு கிடையாது
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இரு அணிகள் இணையாது என்று கூறினார். மேலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டுவிட்டது என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

நிச்சயம் இணையும்
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இரு அணிகளும் நிச்சயம் இணையும் என்று கூறினார். பேச்சுவார்த்தை குழுவை ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும், இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுவணிகர் நலன்
மேலும், 66 அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டியில் சிறுவணிகர்கள், உற்பத்தியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சட்டசபைக் கூட்டம்
வரும் சட்டசபை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பின்னர் பேசப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications