விடுமுறையை கழிக்க வந்த அக்கா, தம்பி கண்மாய் சேற்றில் சிக்கி பலி: இடையமேலூர் அருகே சோகம்
கண்மாயில் குளித்தபோது சேற்றில் சிக்கி அக்காவும் தம்பியும் உயிரிழந்தனர்.
Recommended Video
சிவகங்கை: கோடை விடுமுறைக்கு வந்த அக்கா, தம்பியும் கண்மாயில் குளித்தபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு அனு என்ற 15 வயது மகள். கார்த்தி என்ற 9 வயது மகன். அனு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
தற்போது பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக, சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் தனது அம்மா வீட்டிற்கு தாய் தனலட்சுமி குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். பாட்டி வீட்டுக்கு வந்த பிள்ளைகள் இருவரும் மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அனுவும், கார்த்தியும் வீட்டின் அருகில் உள்ள மங்காம்பட்டி விசம்பரி கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும்போது, கார்த்தி திடீரென கண்மாய் சேற்றில் சிக்கினான். தம்பியை காப்பாற்ற அக்கா அனுவும் சேற்றில் இறங்கினார். ஆனால் இருவருமே சேற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
கண்மாய் அருகில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதனை பார்த்து, கிராம மக்களிடம் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மக்கள், கண்மாயில் அவர்களின் உடலை தேடி கண்டெடுத்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட தாலுகா போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் இருவரின் சடலங்களை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அக்காவும்-தம்பியும் திடீரென உயிரிழந்த சோகம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.