வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: வாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 2016ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த மாதம் 20 ஆம் தேதியும், அடுத்த மாதம் 4 ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மக்களை தொடர்பு கொண்டு பட்டியலை சரிபார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.