இரட்டை கொலை, பணமோசடி வழக்கு: தலைமறைவு வக்கீல் தம்பதி கைது
கோவை: அப்பாவி பெண்ணை கொன்ற வழக்கில் தேடப்பட்ட வக்கீல் தம்பதியை தனிப்படை போலீசார் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் நேற்று கைது செய்தனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (45). இவரது மனைவி மோகனா (41). இருவரும் வழக்கறிஞர்கள். ஒடிசாவில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில் மோகனாவை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக் கில் இருந்து தனது மனைவியை காப்பாற்ற கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அம்மாசை (45) என்ற பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வக்கீல் ராஜவேல், மோகனா இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் பெற்றார்.
இதேபோல் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மணிவேல் என்பவர் கொலை வழக்கிலும் ராஜவேல் சிக்கியுள்ளார். இந்த இரு கொலை வழக்குகள் மற்றும் மோசடி வழக்கு தொடர்பாக வக்கீல் ராஜவேலையும், அவரது மனைவி மோகனாவையும் 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மேலும் வெளிநாடு தப்பிச்செல்லாத முடியாதபடி அவர்களது பாஸ்போர்ட்டுகளை போலீசார் புதன்கிழமை முடக்கினர்.
இந்தநிலையில், திருவனந்தபுரம் அருகே கோவளம் ஓட்டலில் தங்கி இருந்த வழக்கறிஞர் தம்பதியை தனிப்படை போலீசார் வியாழக்கிழமை மதியம் கைது செய்தனர்.
பண ஆசையே காரணம்
வழக்கறிஞர் தம்பதியின் பண ஆசை, வாழ்வை திசை மாற்றி விட்டதாக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, விபத்துகள் நடைபெற்றதாக போலியாக கணக்கு காட்டி காப்பீட்டுத் துறையில் இருந்து பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் ராஜவேல்.
சி.பி.ஐ. விசாரணை நடத்திய அந்த வழக்கில், ராஜவேலுக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், வழக்கின் மீதான அவரது தொடர்பை நிரூபிக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இரட்டை கொலை வழக்கு
ராஜவேல் மீதான சந்தேகம் தொடக்கத்திலிருந்தே இருந்தாலும், வசமாக சிக்கிக் கொண்டது, மணிவேல், அம்மாசை கொலை வழக்குகளில்தான் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
விவசாய குடும்பம்
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், விவசாயி. இவரது மகன்தான் ராஜவேல். கோவை சட்டக் கல்லூரியில் 1990-ஆம் ஆண்டு கால கட்டத்தில் சட்டம் படித்தார். அப்போது, அதே கல்லூரியில் படித்தவர்தான் மோகனா. கல்லூரி காலத்தில், ராஜவேல் - மோகனா இடையே காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். மோகனா சட்டம் படித்திருந்தாலும், அவர் நீதிமன்றம் சென்று வாதாடுவது கிடையாது. ஆனால், ராஜவேல், சிவில், கிரைம் வழக்குகள் இரண்டிலும் திறமையாக வாதாடி வந்துள்ளார்.
பாலியல் புகார்
கோவை சட்டக் கல்லூரியில் படித்த போது, கல்லூரி முதல்வர் மீதே பாலியல் குற்றச்சாட்டு கூறி அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கு காரண மாக இருந்துள்ளார் மோகனா.
முதல்வர் அறைக்கு சென்ற போது, அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த போது, பொய் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மீதான தண்டனை விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
எம்.எல்.எம். மோசடி
ரைக்ட் மேக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்து உள்ளார் மோகனா. மத்திய அரசு ஊழியர் கூறி ஒடிசாவில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.12 கோடி பணம் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஒடிசா காவல்துறையினர் மோகனா உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சீனிவாசன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பாவி பெண் கொலை
இந்த வழக்கில் இருந்துதான், மோகனாவை காப்பாற்ற, அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்து, இறப்பு சான்றிதழ் தயாரித்து, காவல்துறையிடம் சிக்கிக் கொண்டார் ராஜவேல் எனத் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.
பண ஆசையால் வக்கீல் தம்பதியர் தங்களின் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டனர். அதோடு அவர்களின் 5 வயது மகனின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. நூதனமாக கொலைகளை செய்து தப்பித்திருந்தாலும் காலம் கடந்தாவது தண்டனை கிடைக்கும் என்பதற்கு கோவை வக்கீல் தம்பதியரின் வாழ்க்கையே சாட்சி.












Click it and Unblock the Notifications