சேலம் அருகே ஒன்றாக மது அருந்திய இரு மூதாட்டிகள் மரணம் !
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒன்றாக மது அருந்திய இரு மூதாட்டிகள் மரணம் அடைந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, கல்பகனுார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி செல்லம்மாள் (65). ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதேப் பகுதியைச் சேர்ந்தவர் வி.காமாட்சி (50). இவரும் கணவரை இழந்தவர். நண்பர்களான இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் டாஸ்மாக் கடையில் மது பானத்தை வாங்கி காமாட்சிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து குடிப்பார்களாம்.
இந்நிலையில் நேற்று காலை இருவரும் பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கி கிடந்துள்ளனர். வெகு நேரமாகியும் எழுந்திருக்க வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது உறவினர்கள் அந்த பண்ணை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருவரும் உயரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
தகவலறிந்த ஆத்தூர் போலீஸார், விரைந்து சென்று இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மூதாட்டிகள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தனாரா அல்லது வேறு காரணங்களால் இறந்தனரா என்பது பிரதே பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என போலீஸார் கூறினர்.