கொடநாடு கொலை வழக்கு: 8 பேரிடம் விசாரணை - கைதான 4 பேர் சிறையிலடைப்பு!
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கைதான நால்வரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடலூர்: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் சாமி, தீப்பு, சதீசன் மற்றும் உதயகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை தொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கே ஆண்டுக்கு ஒருமுறை ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கு ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அங்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்குள்ள 10ஆம் நம்பர் கேட்டில் பணியில் இருந்த ஓம்பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலாளிகளாகப் பணி புரிந்து வந்தனர். கடந்த திங்கள்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஓம் பகதூர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பது தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய இருவர்
கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடியாகும். இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் பணியில் இருந்துள்ளார். இவர் நேற்று காலை சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். இது திட்டமிட்ட கொலையா? விபத்தா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கனகராஜின் நண்பர் கோவையைச் சேர்ந்த சயான் கேரளாவில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் படுகாயமடைந்தார். அடுத்தடுத்த விபத்து மற்றும் மரணங்கள் காரணமாக கொடநாடு கொலை விவகாரம் மர்மம் நீடித்தது.

4 பேர் கைது
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில், கனகராஜ்தான் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி, தீப்பு, சதீசன் மற்றும் உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்கெட்ச் போட்ட கனகராஜ்
கனகராஜ் போட்டுக் கொடுத்த திட்டத்தின் மூலம் சயான் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பே சிலர் கேரளாவில் இருந்து உதகை வந்துள்ளனர். மீதிப்பேர் ஞாயிற்றுக்கிழமை உதகை வந்துள்ளனர்.

கொலை, கொள்ளை
கனகராஜ்க்கு எல்லா பகுதியும் நன்றாக தெரியும் என்பதால் எந்த அறையில் என்ன இருக்கும் என்பதை அறிந்து 10ஆம் எண் கேட்டிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர். அங்கே காவலுக்கு இருந்த காவலாளியை கொலை செய்து விட்டு,மற்றொருவரை தாக்கி விட்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர்.

அறைகள் உடைப்பு
ஜெயலலிதாவின் அறை உள்ளிட்ட 3 அறைகள் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், பணமோ, நகையோ இல்லாததால், 5 வாட்சுகள், கிரிஸ்டலால் ஆன ஒரு அலங்காரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுள்ளது. ரூ. 200 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவத்தில் இனவோ, எண்டோவர் கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் 2 பேர் கைது
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் கேரளாவில் திருச்சூர், மலப்புரம் பகுதிகளில் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 நாட்கள் நீதிமன்ற காவல்
கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி, தீப்பு, சதீசன் மற்றும் உதயகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications