வந்தவாசி அருகே கேன் வெடித்து நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மர்மகேன் ஒன்று வெடித்து நகராட்சி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி நகராட்சியில் வெங்கடேசன் (வயது 40) டிராக்டர் டிரைவராகவும், அர்ஜீனன் (42) துப்புரவு பணியாளராகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் 2 பேரும் இன்று காலை வந்தவாசி நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை ஏற்றிக்கொண்டு செய்யாறு சாலையில் உள்ள எச்சூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
குப்பைகளை கொட்டிவிட்டு வந்தவாசிக்கு டிராக்டரில் திரும்பினர். அப்போது செய்யாறு சாலையில் தைலமர காடு பகுதியில் 35 லிட்டர் கொண்ட 10 கறுப்பு கேன்கள் ரோட்டில் வரிசையாக இருந்தது.
இதனை பார்த்த 2 பேரும் அந்த கேன்களை அற்புறப்படுத்த முயன்றனர். இதற்காக கேன்களை தூக்கினார். அதிக கனமாக இருந்தது. இதனால் கேனில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த 2 கேன்கள் வெடித்து சிதறியது, இதனால் அந்த இடமே புகைமண்டலமானது. 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வயிறு கிழிந்து வெங்கடேசன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அர்ஜீனன் கை, கால்கள் துண்டாகி உடல் சிதறி பலியானார்.
2 பேரும் சாலையோரத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வந்தவாசி டி.எஸ்.பி. மகேந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ் பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டனர். சிதறி கிடந்த கேனின் உதிரிபாகங்களை அகற்றினர்.
மேலும் வெடிக்காமல் உள்ள 8 கேன்களையும் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்து போக்குவரத்தை போலீசார் திருப்பி விட்டனர்.
கேனில் இருந்த மர்ம பொருள், ஆசிட்டா, அல்லது வெடி பொருள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் வந்தவாசி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications