திருப்பூர் பாஜக பிரமுகரின் 'கள்ளக் காதல்' தற்கொலையை கொலையாக சித்தரித்த 2 பேர் போலீசில் சிக்கினர்!
திருப்பூர் பாஜக பிரமுகர் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதை கொலை போல மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் செட்டப் நாடகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் பாஜக பிரமுகர் மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனை கொலையாக மாற்ற முயன்ற உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். ஆனால் அவரது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தன.
அத்துடன் அவரது உடல் அருகே பிரதமர் மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் 1,2,3,4,5 என எழுதப்பட்டு அதில் 3 என்பது அடிக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து மாரிமுத்துவை சிலர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் மேலும் பலரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பாஜகவினர் கூறி பதற்றத்தை ஏற்படுத்தினர். இதனால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக திருப்பூரில் கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பற்றி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதும் பிரதே பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையை திசை திருப்புவதற்காக அவரது உடல் அருகே பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து வதந்தி பரப்பியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாரிமுத்துவின் உறவினர்கள் உறவினர்கள் 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.