மழை நீரில் வழுக்கி விழுந்த பலூன் வியாபாரி பரிதாபமாக சாவு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் வழுக்கி விழுந்த பலூன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள சிவசக்தி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி ( 60). இவர் அந்த பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிவசக்தி நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே வீடுகளில் தங்கி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அங்குள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். விஜயலட்சுமியும் தனது மகள்களுடன் அந்த பள்ளியில் தங்கினார்.
ராமமூர்த்தி மட்டும் மழைநீர் சூழ்ந்து உள்ள தனது வீட்டில் தனியாக படுத்து இருந்தார். நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த ராமமூர்த்தி, மழைநீரில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காலையில் வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி, வீட்டின் முன்புறம் தேங்கி நின்ற மழைநீரில் ராமமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து விஜயலட்சுமி கதறி அழுத்தத்தைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, மணலி பெரியார் நகரை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (75). வீட்டில் தனியாக படுத்து இருந்த இவர், பலத்த மழையால் ஏற்பட்ட குளிரினால் பரிதாபமாக உயிரிழந்தார்.