ஆரணி அருகே மின் கம்பியை மிதித்த இரு சகோதரர்கள் தாய் கண்முன்பே பலியான பரிதாபம்
திருவண்ணாமலை: ஆரணி அருகே பள்ளிக்குச் சென்ற இரு சகோதரர்கள் மின் கம்பியை மிதித்தால் தாய் கண்முன்பே பரிதாபமாக பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் குமாரசாமி காலனியை சேர்ந்த வேலு-சங்கீதா தம்பதியினர் மகன்கள் சந்தோஷ்குமார், நிவேத்குமார். அங்குள்ள பொன்னகர் அரசு தொடக்கப் பள்ளியில் இருவரும் பயின்று வந்தனர்.
சகோதரர்கள் இருவரும் தாயுடன் இன்று காலை பள்ளிக்கு சென்றனர். களம்பூர் அரசு மருத்துவமனையின் பின்புற வழியாக சென்று கொண்டிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த களம்பூர் காவல் நிலைய போலீசார், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் கண்முன்பே நிகழ்ந்த இந்த துயார சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.