பேச்சுவார்த்தையில் இனி பிரச்சனை இருக்காது… சீக்கிரமாகவே 2 அணிகளும் சேர்ந்திடும்… தம்பிதுரை நம்பிக்கை
இரு அணிகள் இணையும் பேச்சுவார்த்தைக்கு இனி பிரச்சனை இருக்காது என்று அதிமுக அம்மா கட்சி எம்பி தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இனி பிரச்னையில்லை என்று அதிமுக அம்மா கட்சி எம்பி தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. பின்னர், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் முயற்சிகளை மேற்கொண்டன.
சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இழுபறி
இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதிலேயே பிரச்சனை எழுந்தது. அனைவரும் பேசுவதை தவிர்க்க குழு அமைக்க இரு தரப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குழு
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த தலா 7 பேர் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனாலும், இரு அணிகளும் முறைப்படியான பேச்சுவார்த்தையை தொடங்காமல் ஒரு அணியை மற்றொரு அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முட்டுக்கட்டை
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரு அணிகளும் இணைவதில் எங்கள் தரப்பில் இருந்து எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இணைப்பு
இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் வந்த ஈபிஎஸ் அணியில் உள்ள எம்பி தம்பிதுரை, இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தையில் இனி பிரச்சனை இருக்காது என்று கூறினார். மேலும், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை இல்லை என்று ஓபிஎஸ் கூறியதை சுட்டிக் காட்டிய தம்பிதுரை, பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.