ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசலில் இளைஞர்கள் இன்று டூவீலர் பேரணி
ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தின் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெடுவாசலில் இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் அந்த திட்டம் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று பெயரை மாற்றி வழங்குகிறது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசலை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திட்டத்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இத்திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.