சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மணப்பாறையில் முன்னாள் நீதிபதி பேரன் கடத்தல்!
மணப்பாறையில் முன்னாள் நீதிபதியின் பேரன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: மணப்பாறையில் முன்னாள் நீதிபதியின் இரண்டு வயது பேரன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களை பிடித்து குழந்தையை மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி, அரபிக்குளம் சந்து தெருவைச் சேர்ந்த பிரகாஷ்-முத்துலெட்சுமி தம்பதியின் இரண்டு வயது மகன், சாய் தர்ஷன். கடந்த சில தினங்களாக, குழந்தை சாய் தர்ஷன், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் அருகே அத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனது தாத்தா ஆறுமுகம் வீட்டில் இருந்தார். ஆறுமுகம், ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி.
பிரகாஷின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால், நோய் தொற்று குழந்தைக்கும் ஏற்படும் என்று, தன் மனைவியின் வீட்டிற்கு சாய் தர்ஷனை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக அத்திக்குளம் பகுதியில் உள்ள முத்துலட்சுமியின் அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளான். நேற்று மாலை வீட்டின் எதிரே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, பைக்கில் ஹெட்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர், குழந்தை சாய் தர்ஷனை கடத்திச் சென்று விட்டார்.
குழந்தையை, பைக்கில் வந்தவர் கடத்திச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, அந்தப் பகுதி சிறுவர்கள், ஆறுமுகம் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தர்ஷனின் பெற்றோர், மணப்பாறை போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தனிப்படை அமைத்து, கடத்தப்பட்ட குழந்தை தர்ஷனைத் தேடி வருகின்றனர்.
அப்பகுதி மக்களிடமும், குழந்தையின் பாட்டியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். திருச்சி - திண்டுக்கல் சாலையில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் குழந்தை கடத்தப்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நரபலிக்காக அல்லது விற்பனைக்காக குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் பரவியதால், மணப்பாறைப் பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மணப்பாறை நீதிமன்றம் அருகேயே, பட்டப்பகலில் நீதிபதியின் பேரன் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.