மோடி அரசு தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது - சுப.உதயகுமார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது என பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது போல காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ள வைப்பதற்கு பதிலாக, வாரியம் இப்போது அமைக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு தேச விரோத, சுயநலவாதச் செயல்.

தமிழர்களுக்கு நியாயம் கிடைப்பதைவிட, இந்தியாவின் ஒரு பெரும் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண்பதை விட, இந்தியாவின் ஒருமைப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதைவிட எதிர்வரும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மோடிக்கும், காவிகளுக்கும் முக்கியமாகப்படுகிறது. இவர்கள் பேசும் தேசபக்திமிக்க இந்தியத் தேசியம் சந்தர்ப்பவாத தேர்தல் அரசியலாய் நாறிக் கொண்டிருக்கிறது.
குஜராத் பார்முலாவைக் கொண்டாடும் இவர்களிடம் இதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்க முடியாது, கூடாது. அத்தி பூத்தாற்போல ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமக்கு உகந்ததாக வந்ததும், அது மோடி அரசால் முடக்கப்பட்டுவிட்டது. இனி கெஞ்சி, கூத்தாடி, கடிதம் எழுதி, நாடகமாடி, பேச்சுவார்த்தை நடத்தி கட்சிகள் அரசியல் செய்வார்கள். தமிழ் விவசாயி மீண்டும் துவங்கிய இடத்தில் வந்து நிற்பான்.
இன்னொரு பக்கம் தமிழர்கள் விரும்பாத கூடங்குளம் விரிவாக்கம், மீத்தேன், நியூட்டினோ, கெயில் என அனைத்து ஆபத்தானத் திட்டங்களும் அப்பட்டமாக நம் மீது திணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?
1. தமிழகம் முழுவதும் பா.ஜ.க. காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்வோம்.
2. தங்கள் மீதுள்ள வழக்குகளால் தில்லிக்காரர்களுக்கு பயந்து தமிழர்களைக் காட்டிக்கொடுக்கும் தீரா விடங்களை இனம் காண்போம், மக்களுக்கு எடுத்துரைப்போம்.
3.மத்திய அரசு, உச்சநீதிமன்றம் எல்லோருக்கும் ஒருபுறம் இருக்கட்டும், நமது வாழக்கை, தேவைகள், திட்டங்களை நாம் முடிவு செய்வோம். நடைமுறைப் படுத்துவேம். ஏற்க முடியாதவற்றை ஒன்றாய் நின்று எதிர்ப்போம். தமிழகத்தில் தமிழர்கள்தான் எஜமானர்கள் என்பதை நிலை நாட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications