பெரிய ஸ்ரீதேவியாக்கும் நீ.. மறக்க முடியாத அழகோவியம்!
Recommended Video

சென்னை: நீ பெரிய ஸ்ரீதேவியாக்கும்.. 70களின் கடைசியிலும், 80களின் தொடக்கத்திலும் அதிகம் பேசப்பட்ட வசனம் இது. ஸ்ரீதேவி அப்படி ஒரு அழகுப் பாவையாக, அழகோவியமாக அத்தனை பேரையும் வசீகரித்த காலம் அது.
அழகாக இருக்கும் பெண்களைப் பார்த்து கிண்டலாக சொல்லப்படும் வார்த்தை இது. ஒவ்வொரு இளம் பெண்ணுக்குள்ளும் அன்று ஸ்ரீதேவி ஒளிந்திருந்தார். ஸ்ரீதேவியைப் போல தங்களை வரித்துக் கொண்ட பெண்கள் அன்று ஏராளம்.
குறும்பு கொப்பளிக்கும் கண்கள்.. அதில் கோபம், தாபம், சிரிப்பு, கிண்டல், ஏக்கம் என எல்லாமும் நிறைந்து வழியும்.. அற்புத விழிகள் அவை.. யாருக்கும் அத்தனை சீக்கிரம் வாய்த்திராத அம்சம் ஸ்ரீதேவியின் கண்கள்.

கண்ணும் மூக்கும் உதடுகளும்
அவரது பழைய குட மிளகாய் மூக்கு (பாலிவுட்டுக்குப் போன பிறகு அதை ஆபரேஷன் செய்து மாற்றி விட்டார்) இன்னொரு ஸ்பெஷல். அவரது நடிப்பில் அந்த மூக்குக்கும் தனி இடம் உண்டு. அதுவும் சேர்ந்து நடிக்கும். அழும்போதும், சிரிக்கும்போதும் அவர் மூக்கு சுளிக்கும்போதும், அத்தனை அழகு.

அறிவும் அழகும்
இயல்பான அழகுடன் அக்காலத்து இளைஞர்களை மட்டுமல்லாமல் பெண்களையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி. அழகோடு மட்டுமல்லாமல் அவரது அறிவுப்பூர்வமான நடிப்பும் அத்தனை பேசப்பட்டது. பெண்களுக்கு உண்மையான அழகே, அவர்களது அறிவுதான் என்பதை ஸ்ரீதேவி ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் உணர்த்தின.

கமல், ரஜினிக்கு சரியான ஈடு
மூன்று முடிச்சு படத்தில் அத்தனை சிறிய வயதில் அவர் ஏற்று நடித்த அந்த பாத்திரம் பெரும் பாராட்டுக்களை வாரிக் குவித்தது. கமல் என்ற ஜாம்பவானையும், ரஜினி என்ற ஆளுமையையும் அந்தப் படத்தில் ஓரம் கட்டியிருப்பார் ஸ்ரீதேவி தனது நடிப்பால்.

எந்தப் பாத்திரமாக இருந்தாலும் சிறப்பு
கமல் மற்றும் ரஜினியுடன் அவர் நடித்த ஒவ்வொரு படமும் 80களை முழுமையாக ஆக்கிரமித்தவை. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக பேச முடியும், நாள் கணக்கில் சிலாகிக்க முடியும். சின்ன சின்ன பாத்திரமாக இருந்தாலும் கூட தன் பக்கம் அத்தனை பேரையும் திருப்பும் அலாதியான சக்தி படைத்தவர் ஸ்ரீதேவி.

ஆகாய கங்கையில் அசத்தியவர்
தர்மயுத்தம் படத்தில் வரும் ஆகாய கங்கை படத்தில் ஸ்ரீதேவியின் கண்ணும், அவரது பாடி லாங்குவேஜும் அத்தனை பிரமாதமாக இருக்கும். இன்று வரை அந்த உணர்ச்சிமிகு நடிப்புக்கு இணையான ஒரு காட்சியை எந்த நடிகையிடமும் பார்க்க முடியவில்லை. அதுவும் அந்த தொடக்க ஹம்மிங்.. இன்னொரு ஸ்ரீதேவி பிறந்து வர வேண்டும்!

மீண்டும் வருவாரா கோகிலா
தனது அழகாலும், அறிவாலும், அபாரமான நடிப்பாற்றலாலும் அத்தனை பேரையும் வசீகரித்த நடிப்புத் தேவதை ஸ்ரீதேவி. தன்னுடன் நடிப்பது ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி, அரவிந்த சாமியாக இருந்தாலும் சரி, விஜய்யாக இருந்தாலும் சரி, எல்லோரையும் விட ஒரு படி மேல்தான் அவர் காட்சி தருவார். அதுதான் ஸ்ரீதேவி ஸ்பெஷல்.
மீண்டும் கிடைப்பாரா இப்படி ஒரு கோகிலா?












Click it and Unblock the Notifications