“நான் தமிழ்நாடு ஸ்டைல்ல பேசுனா நல்லா இருக்காது” பிரஸ் மீட்டில் கோபப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்
புதுச்சேரி: "நான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் அது நல்லா இருக்காது. இது விவாதம் செய்யும் இடம் கிடையாது" என்று பிரஸ் மீட்டில் செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எல். முருகன், "புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக நேரடி பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 3,432 கோடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிப்மருக்கு ரூ. 1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 150 கோடி உட்கட்டமைப்பை மேம்படுத்த தரப்படும்.

விவசாயிகள் கிசான் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை 16 ஆயிரம் விவசாயிகள் புதுச்சேரியில் பெறலாம். குடிநீர் மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டியதில்லை.
தமிழகத்தில் கடந்த 2014க்கு முன்பாக ரயில்வேக்கு ரூ. 800 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம். புதிய ரயில் பாதை ஒதுக்குகிறோம். கன்னியாகுமரி உட்பட பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. தமிழக அரசு ஒத்துழைப்பு தந்து நிலங்களை கையகப்படுத்தி தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், புதுச்சேரிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். புதுச்சேரியில் நிதி நெருக்கடி உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறியதையும் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதில் அளித்த எல்.முருகன், "புதுச்சேரிக்கு நிதி நெருக்கடி இல்லை. ஆளுநரும் முதல்வரும் கேட்ட நிதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அனைத்து உதவிகளையும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் முழுமையாக செய்கிறார்கள். பாரபட்சமின்றி நிதி தருகிறோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு உபயோகமான பட்ஜெட் இது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து புதுச்சேரி பிரச்சனைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் எல்.ர்முருகன், "பட்ஜெட் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். புதுச்சேரிக்கு திட்டங்கள் அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தேவைகள் இருந்தால் ஆளுநர், முதல்வர் தரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்." என்றார்.
தொடர்ந்து பேசிய எல்.முருகன், "நான் தமிழ்நாடு ஸ்டைலில் பேச ஆரம்பித்தால் அது நல்லா இருக்காது. இது விவாதம் செய்யும் இடம் கிடையாது. வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நிதி கொடுத்துள்ளோம், அதை வரவேற்க வேண்டும்" என்று கோபத்துடன் பேசிவிட்டு, உடனடியாக கிளம்பினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோபமாகப் பேசிவிட்டு பாதியிலேயே கிளம்பியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications