"இந்திய ஐக்கிய நாடுகள்" என பெயர் மாற்றம் செய்வோம்: மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
சென்னை: இந்தியாவின் பெயரை அமெரிக்கா போல 'இந்திய ஐக்கிய நாடுகள்" (United Staes of India) என பெயர் மாற்றம் செய்வோம் என்று மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ வெளியிட்டார். மொத்தம் 46 தலைப்புகளில் மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் "இந்தியா பெயர் மாற்றம் - அரசியல் சட்டம் மறு ஆய்வு, மாநில சுயாட்சி, தமிழ் ஆட்சிமொழி, மத்திய வரி வருவாய் பங்கீடு" என்ற முதலாவது வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளதாவது:

‘இந்திய ஐக்கிய நாடுகள்' (United States of India)
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 64 ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவைக்கு ஏற்ப, இதுவரை 98 முறை திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் நோக்கம், இந்தியாவில் கூட்டு ஆட்சி முறையைச் செயல்படுத்துவதாக இருந்தது.
ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் முழங்கியவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசில் அளவற்ற அதிகாரங்களைக் குவித்து வைத்துக்கொண்டனர். மாநிலங்களின் கூட்டு அமைப்புதான் இந்திய நாடாக ஒன்றிணைந்து காட்சி தருகிறது என்பதை மறந்து விட்டனர்.
மாநிலங்கள் அதிகாரம் அற்ற வெறும் கூடுகளாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இன்று, இந்தியா ஒற்றை ஆட்சிமுறை நாடாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி உண்மையான கூட்டு ஆட்சியை நிலைபெறச் செய்யவும், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, டாக்டர் அம்பேத்கர் அவர்களே சுட்டிக் காட்டியதுபோல், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த நாடு, ‘இந்திய ஒன்றியம்' (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, ‘இந்திய ஐக்கிய நாடுகள்' (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கழகம் வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொள்ளும்.

மாநில சுயாட்சி
மாநில சுயாட்சிக்கான குரலை இந்தியாவில் ஓங்கி ஒலித்த பேரறிஞர் அண்ணா அவர்கள், "நமது அரசியல் சட்டம் பெயரளவில் கூட்டு ஆட்சியாக உள்ளது; நடைமுறையிலோ, அதிகாரங்கள் மேலும் மேலும் மத்திய அரசிடம் குவிக்கப்படுகின்றன; இப்படிப்பட்ட ஓர் அரசியல் சட்டத்தின் கீழ் நம் மாநில முதல்வராக இருப்பதில் நான் மகிழவில்லை. தற்போதைய அரசியல் சட்டம் இரட்டை ஆட்சி முறையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று எடுத்துக் காட்டினார்.
கடந்த அறுபது ஆண்டுகளில், கல்வி உள்ளிட்ட, மாநில அரசுகளிடம் இருந்த பல்வேறு அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொண்டு உள்ளது. அவற்றை மீண்டும் மாநில அரசுகளுக்கே திருப்பித் தர வேண்டும். பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத, ‘எஞ்சிய அதிகாரங்கள்' அனைத்தையும் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநிலங்களின் கருத்துகளை அலட்சியப்படுத்திவிட்டு, உணவு பாதுகாப்புச் சட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சில்லரை வணிகத்தில் அயல்நாடுகளின் நேரடி முதலீடு, ஓய்வு ஊதிய மசோதா, வரி வருவாய் ஒதுக்கீடு, உங்கள் கையில் உங்கள் பணம், மரபு அணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்தது. இந்நிலை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.
மத்திய-மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டு ஆட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலங்களில் இருந்து மத்திய அரசு பெறுகின்ற வரி வருவாயில், திட்டக்குழுவின் மூலம் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம்.
தமிழ் ஆட்சி மொழி
பல்வேறு தேசிய இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கப்பட்டால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும். மாறாக, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் தாய்மொழியாகிய இந்தி மொழியை, ஆட்சிமொழியாக்கி ஆதிக்கம் செலுத்த முனைந்ததை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியது தமிழ்நாடு.
தொன்மைச் சிறப்பும், இலக்கண இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
இதற்காக, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 2001 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்று உள்ள தமிழ்மொழி உள்ளிட்ட 23 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதுவரையிலும் ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்.
அதற்கான அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.
செம்மொழி நிறுவனம்
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில், கல்வியாளர் அல்லாத, தமிழ் அறியாத ஒருவரை நியமனம் செய்ததை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் எதிர்த்தது. மரபார்ந்த தமிழ் அறிவும், தமிழ் ஆய்வுகள் குறித்த முழுமையான புரிதல்களும் கொண்ட, தகுதி வாய்ந்த ஒருவரை முழுநேர இயக்குநராக, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுனத்தில் பணி அமர்த்தவும், பணியாளர்களின் கோரிக்கைளை நிறைவேற்றித் தரவும் நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications