எஸ்.ஐ ஆல்வின் சுதன் சிலை திறப்புவிழா தள்ளிவைப்பு: போலீசார் அதிர்ச்சி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல்நிலைய வளாகத்தில் எஸ்ஐ ஆல்வின்சுதன் சிலை திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தி காவல்நிலைய எஸ்ஐ ஆல்வின்சுதன். இளைஞரான இவர் எஸ்ஐ யாக பயிற்சி முடித்து திருப்பாச்சேத்தியில் நியமிக்கப்பட்டார். துடிப்பாக செயல்பட்ட இவரை கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி வேம்பத்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போது 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற போது என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றும் கொக்கி குமாரும் இறந்தான். மீதமுள்ளவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இறந்த எஸ்ஐ ஆல்வின்சுதன் நினைவாக திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு சிலையும் தயாராகி வந்துவிட்டது.
அக்டோபர் 27ம் தேதி டிஐஜி தலைமையில் திறக்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 24ம் தேதி காலையில் திடீரென திறப்பு விழா கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளுடன் போலீஸ் வேலையில் சேர்ந்த ஒரு இளைஞனின் மரணத்திற்கு போலீஸ் துறை செய்யும் நன்றி கடனா இது என கொந்தளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் எஸ்ஐக்கு சிலை வைக்கும் தகவலறிந்து பலரும் சந்தோசப்பட்டோம். என்ன காரணம் என்று கூறாமல் இப்போதைக்கு திறப்பு விழா இல்லை என்று கூறிவிட்டனர். அவர் கொலை செய்யப்பட்ட 27ம் தேதி திறந்தால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருக்கம். இதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை, கேரளா போல் இங்கும் போலீசாருக்கு சங்கம் இருந்தால் குரல் கொடுத்திருப்பார்கள், உண்மையாக உழைப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதைதான் இது. இப்படி இருந்தால் யார் நேர்மையாக பணிபுரிவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார். சிலை திறப்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்ட தகவல் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications