ஆளுநருடன் ஓபிஎஸ் அணி மைத்ரேயனும் திடீர் சந்திப்பு!
முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இன்று ஆளுநரை மீண்டும் சந்தித்து பேசினார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் மற்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் நேற்று மாலை கிண்டி ராஜ்பவன் வந்தனர். அவருடன் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஏற்கனவே ஒரு முறை இவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் மீண்டும் நேற்று சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5.30 மணி அளவில் ஆளுநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து 40 நிமிட இடைவேளியில் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.