கடைசி வரை திமுக - தேமுதிகவை நெருங்கவே விடாமல் "பேசியே" சாதித்த வைகோ!
சென்னை: திமுக - தேமுதிக கூட்டணி தொடர்பாக பேச்சு வரும்போதெல்லாம் உள்ளே புகுந்து எதையாவது காரசாரமாக பேசி திமுக தரப்பை உசுப்பி விட்டபடியே இருந்து கடைசி அவர்களை ஒன்று சேர விடாமல் கடுமையாகப் போராடி தடுத்து தன் பக்கம் கொண்டு வந்து விட்டார் வைகோ.
இது "டேக் ஆப்" ஆகி பறக்க ஆரம்பித்து விட்ட விமானம். இதை மீண்டும் இறக்க முடியாது என்றெல்லாம் பேசி வந்தார் மக்கள் நலக் கூடடணியின் வைகோ. ஆனால் தற்போது டேக் ஆப் ஆன அந்த விமானத்தை விஜயகாந்த்துக்காக கோயம்பேட்டில் தரையிறக்கி அவரையும் பிக்கப் செய்து இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல வைத்துள்ளது மக்கள் நலக் கூட்டணி.!
மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும், வரும் என்று முதலிலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார் வைகோ. ஆனால் விஜயகாந்த் தரப்போ பாஜக, திமுக என்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. ரகசியமாக பேச்சுக்கள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தனர். ஆனாலும மக்கள் நலக் கூட்டணி நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து காத்திருந்தது.
இந்த நிலையில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்ததும் அவர் மீது கட்சிகளுக்கு இருந்த கிரேஸ் போய் விட்டது. ஆனாலும் மக்கள் நலக் கூட்டணி மட்டும் நம்பிக்கை இழக்காமல் இருந்தது. அதேசமயம், விஜயகாந்த் தப்பித் தவறிக் கூட பாஜக பக்கமோ, திமுக பக்கமோ போய் விடாத வகையில் கருத்தாக பேசி வந்தனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.
குறிப்பாக திமுக பக்கம் தேமுதிக திரும்பி விடாத வகையில் வைகோ தொடர்ந்து திமுகவைத் தாக்கித் தாக்கிப் பேசி வந்தார். பிரேமலதா விஜயகாந்த் உங்களைப் பார்த்து தில்லுமுல்லுக் கட்சி என்று கூறினாரே அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று தொடர்ந்து திமுகவைக் கேட்டு வந்தார். இதன் மூலம் அடி மட்ட திமுகவினரின் உணர்வுகளை அவர் உசுப்பி விட்டபடியே இருந்தார்.
அது மட்டுமல்லாமல் மீண்டும் திமுகவுடன் தேமுதிக பேசுவதாக கருணாநிதி பேட்டி கொடுத்ததுமே, நாங்கள் விஜயகாந்த்தைச் சந்திப்போம் என்று கூறிய வைகோ, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திமுகவை ஊழல் கட்சி என்று விஜயகாந்த சொல்லியுள்ளாரே, பேப்பரைப் படிக்கலையா நீங்க எநன்று கருணாநிதியைக் கேட்டு உசுப்பி விட்டார்.
அது மட்டுமா. தேமுதிகவுடன் பேச்சு தொடர்பாக கருணாநிதி ஒன்று சொல்ல, மு.க.ஸ்டாலின் அதற்கு விளக்க அதைப் பிடித்துக் கொண்டார் வைகோ. கட்சித் தலைமையை உதாசீனப்படுத்தி விட்டார் ஸ்டாலின். கருணாநிதியின் மூக்கறுத்து விட்டார் மு.க.ஸ்டாலின், கட்சி கருணாநிதி கட்டுப்பாட்டிலேயே இல்லை என்று அதிரடியாகப் பேசி மேலும் சூட்டைக் கிளப்பினார்.
இப்படி திமுக - தேமுதிக கூட்டணி தொடர்பாக ஏதாவது பேச்சு வந்தால் உடனே உள்ளே புகுந்து காரசாரமாக பேசி இருவரையும் நெருங்கவே விடாமல் செய்து விட்டது வைகோவின் சாமர்த்தியம்தான்.
சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் இணைந்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு, இது டேக் ஆப் ஆகி பறக்க ஆரம்பித்து விட்ட விமானம். தேமுதிக வேண்டுமானால் எங்களுடன் இணையலாம். தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி செயல்படாது என்றார் வைகோ.
ஆனால் இன்று கோயம்பேட்டில் தரையிறங்கி விஜயகாந்த்தை பிக்கப் செய்துள்ளது இந்த விமானம்.. உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கிள்தான்!