இனி "பச்சைத் தலைப்பாகைதான்" சபதம் என்னாச்சு? செய்தியாளர் கேள்விக்கு வைகோ 'உர்ர்'
கோவை: வாழ்நாளில் இனி எப்போதும் பச்சைத் தலைப்பாகைதான் அணிவேன் என்ற உங்கள் உறுதிமொழி என்னாச்சு என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திடீரென தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பச்சைத் தலைப்பாகை அணிந்து கலந்து கொண்டார் வைகோ. அப்போது பேசிய வைகோ, நான் இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, அவர்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றவே மாட்டேன் என போவதில்லை என சபதம் போட்டார்.

அதேபோல் தேர்தல் வரை தலையில் பச்சைத் தலைப்பாகை, கழுத்தில் கருப்புத் துண்டு என வலம் வந்தார் வைகோ. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பச்சைத் தலைப்பாகைக்கு டாட்டா காட்டிவிட்டார் அவர்.
இந்நிலையில் இன்று கோவை வந்த வைகோவிடம், பச்சை தலைப்பாகை ஏன் அணிவதில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க மறுத்த வைகோ, அதெல்லாம் வேணாமே என அந்த கேள்வியைத் தவிர்த்ததுடன், மக்கள் நலக்கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக பணத்தை வாரி இறைக்கும் பணியை இப்போதே துவங்கி விட்டன. அதையும் மீறி வெல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications