அடிப்படையே தெரியாமல் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துள்ளனர்- வைகோ கண்டனம்
சென்னை: ஜல்லிக்கட்டின் அடிப்படை கூட தெரியாமல் அதற்குத் தடை விதித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்களுக்கு அதுகுறித்த அ ஆ கூட தெரியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டுக்கு அடையாளமாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு, தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற கலாச்சார நிகழ்ச்சி ஆகும். 2011 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விலங்குகளைக் காட்சிப் பொருள் ஆக்குவதற்குத் தடை விதித்த பட்டியலில் காளைகளையும் சேர்த்தது, மிகத் தவறான, கண்டனத்திற்குரிய நடவடிக்கை ஆகும்.

நாடு முழுவதிலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான காளைகள், பசுக்கள், எருமை மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் ஓட்டும்போது மாடுகள் மீது தார்க்குச்சிகளையும், குதிரைகள் மீது சவுக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தமிழர்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிள்ளைகளாகப் பாவித்து வளர்த்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போதும் காளைகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் நடைபெறுவது இல்லை. சில வேளைகளில் மாடு பிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படும்.
இந்த அடிப்படையை உணராமல் மத்திய அரசு தடையைக் கொண்டு வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசும் தவறி விட்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் 48 உறுப்பினர்களைக் கொண்டு இருக்கின்ற அதிமுக, கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவே இல்லை.
முதல்வர் கடிதம் எழுதுவதும், அறிக்கை விடுவதுமாக பொறுப்பைத் தட்டிக் கழித்தார். மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க முயற்சித்த போதிலும், மத்திய அரசு வேண்டாவெறுப்பாக ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி என்று அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வராமல், அவசரச் சட்டமும் கொண்டு வராமல், இப்பிரச்சினையை மத்திய அரசு அணுகிய விதம், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள், ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கத் தமிழக அரசே அவசரச் சட்டம் இயற்றலாம் என்று யோசனை கூறினார்.
தைப்பொங்கலுக்கு மிகக் குறுகிய இடைவெளியே இருப்பதால், மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகை காண வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது ஜல்லிக்கட்டில் காளைக்கு வதை என்றால் மாட்டு வண்டி ஓட்டும்போது தார்க்குச்சியைப் பயன்படுத்துகிறார்கள், குதிரை வண்டி ஓட்டுகிறார்கள், நாடு முழுவதும் ஆடு மாடுகளைச் சாப்பிடுகிறார்கள். இதற்காக எல்லாவற்றையும் தடை செய்து விட முடியுமா என்று கேட்டார்.












Click it and Unblock the Notifications