முத்தப் போராட்டத்தை ஏற்க முடியாது.. வைகோ கருத்து
திருப்பூர்: முத்தப் போராட்டம் என்ற பெயரில் நடப்பது கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிரானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கேரளாவில் தொடங்கிய இந்த முத்தப் போராட்டம் இப்போது பேஷனாகி பல ஊர்களுக்கும் பரவி வருகிறது.
தமிழகத்திலும் சென்னையில் ஐஐடி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் காரித் துப்பும் போராட்டத்தை நடத்தினர்.
கோவையில் நடக்கப் போவதாக ஏற்பட்ட ஒரு பரபரப்பினால் வணிக வளாகத்தையே இழுத்து மூடினர். இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு கருத்து வெளிப்பட்டுள்ளது. அதை வெளியிட்டிருப்பவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் நடந்து வரும் முத்தப் போராட்டம் என்பது தமிழர்களின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அதை ஏற்றுக் கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியாது என்றார் வைகோ.